Translate

Monday, April 30, 2018

மின்னுவதெல்லாம் நம்பிக்கைதான் !!

மின்னுவதெல்லாம் நம்பிக்கைதான் !!

       கடந்த/இந்த மாதம் 21 வது காமன் வெல்த் போட்டிகள் கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று இனிதே முடிவுற்றது . 71 நாடுகள்,  4426 வீரர்/வீராங்கனைகள்,19 விளையாட்டில் 275 நிகழ்வுகள்  என  விளையாட்டு  திருவிழாவாக கோலாகலமாக  ஏப்ரல் 4 முதல் 15 வரை  சிறப்பாக நடந்தேறியது, ஒலிம்பிக்ஸ் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதே பாணியிலே காமன் வெல்த் போட்டிகளும் நடைபெறுகின்றன.ஒலிம்பிக்ஸ் அளவிற்கு நாடுகள் பங்கேற்பதில்லையென்றாலும்  இது வருகிற ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது. நிறைவுபெற்ற போட்டிகளில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்,இங்கிலாந்து இரண்டாவது , இந்தியா மூன்றாவதாக இடத்தைப் பிடித்தது.சரி ! ஒரு சின்னதா முன்னோட்டம் கொடுத்தாச்சு..

           கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம், ஒரு யானைப்போல மற்ற விளையாட்டுகளை விழுங்கிவிட்டது என்றே துணிச்சலாக சொல்லலாம், நம்மில் பலருக்கு இந்த காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா எத்துனை விளையாட்டில் பங்குபெற்றது , அதில் எவ்வளவு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வென்றன என்பது தெரியாது , இது ஒரு குறைகூறல் அல்ல. நிதர்சனம். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனேரியோவில் நடந்த ஒலிம்பிக்சில் இந்திய வெறும்  இரண்டே பதக்கங்களைக் கைப்பற்றியது, சாய்னா நேவால் (இறகு பந்து ) வெள்ளி  , சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) வெண்கலமும் வென்றார்கள். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நாட்டில் 2 பதக்கங்கள் என விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிடப்பது. நம் ஊடங்கங்கள் வணிக தளத்தில் சிக்கி கிரிக்கட்டையே பிரதானப்படுத்தும் நிலை முழுமையாக மாறினால் மட்டுமே மற்ற விளையாட்டின் மீது வரும் தலைமுறையினருக்கு ஈர்ப்பு ஏற்படும். இங்கு கிரிக்கெட்டைப் பகையாக குறிப்பிடவில்லை பெரும் பாரா முகம் நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்காக குறிப்பிடுகிறோம்.

           26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களோடு பட்டியயலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து செம்மையாக நமது போட்டியாளர்கள் செயல்பட்டனர், 216 வீரர்/வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் கண்டனர், அனைவரும் முழு உத்வேகத்துடன்  போட்டியிட்டனர்.  குறிப்பிடும் விதமாக தடகளத்தில் ஒரே ஒரு தங்கம் , ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா முதல் முறையாக தங்கம் வென்று சாதனைப் புரிந்தார். இவரின் பங்களிப்பு மிகவும் அளப்பறியாதது. ஏனெனில், நாம்  தடகளத்தில் பெரியதாக இதுவரை சோபித்ததேயில்லை, இந்திய தடகளத்திற்கு இது ஏறுமுகமே !  இந்த ஆண்டு அதிக பட்சமாக துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம் , 4 வெள்ளி , 5 வெண்கலம் என மொத்தமாக 16 பதக்கங்கள் கொண்டு அசத்தியது, இதில் சிறப்பு 16 வயதுடைய இளம் வீராங்கனை மனு பேக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் தங்கம் வென்றார் இதே போன்று 15 வயதாகும்  அனிஷ் பன்வாலா ஆடவருக்கான 25 மீட்டர் ராபிட் பயர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார், பதக்கம் வென்ற இளம் வயது இந்தியர் எனும் பெருமை இவரையே சார்ந்தது.குத்துச்சண்டை , டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் என எல்லா போட்டிகளிலும் கடந்த ஆண்டுகளை விட நல்ல முன்னேற்றம் தென்பட்டது.
             மகளிர் இம்முறை ஆடவருக்கு இணையாக பதக்கங்களைக் குவித்துள்ளனர், மொத்தத்தில் ஆண்கள் 13 தங்கம் , பெண்கள் 12 தங்கமும் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. வளர் இளம் தலைமுறை பெண்களுக்கு மேரி கோம், சாய்னா நேவால், சிந்து, மாணிக் பத்ரா, பூனம் யாதவ், மனு பேக்கர் போன்ற இன்னும் பல பெண்கள் முன்மாதிரியாக விளங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தின் பங்கு :

        சதிஷ் சிவலிங்கம் வேலுரைச் சேர்ந்தவர், பளு தூக்குதலில் தங்கம் வென்றார்.மிகவும் எளிய குடும்ப பின்னணியிலிருந்து இந்தியளவில் சிறந்து விளங்குவது மெச்சத்தக்கது, இவர் 2014 யில் நடைபெற்ற கமான் வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்குவாஷில்  தீபிகா பள்ளிக்கல், ஜோஷ்னா சின்னப்பா மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்கள், இவ்விருவரும் தொடர்ந்து தமிழகத்திற்கு இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வண்ணம் உள்ளனர், இவர்களைப் பார்த்து இளம் சிறார்கள் ஸ்குவாஷ் மீது அதிகம் ஈர்ப்பு கொண்டு பயிற்சி மேற்கொள்வது மிக மகிழ்ச்சியூட்டுகிறது. சரத் கமல் , சத்யன் மற்றும்  அமல்ராஜ் டேபிள் டென்னிஸில் வெள்ளியும் வெண்கலமும் என இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளில் வென்று அசத்தினர், நம் தமிழக வீரர்கள் இந்தியளவில் மட்டுமல்லாது உலகளவில் சிறந்து விளங்குவது நமக்கு தானே பெருமை.

         ஒட்டுமொத்தத்தில் நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா மல்யுத்தம், பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் , குத்துச்சண்டை , இறகு பந்து என சிறப்பாக விளங்கினாலும் சைக்ளிங், ஜிம்னாஸ்டிக்ஸ் , லான் பௌல்ஸ், நீச்சல் மற்றும் பாஸ்கெட்பால் போட்டிகளில் இரண்டு சுற்றுகள் கூட முன்னேற வில்லை என்பது வருத்தமளிக்கிறது. IOA - இந்தியன் ஒலிம்பிக் சங்கம் சோபிக்காத விளையாட்டுகளின் முடிவுகளை வைத்து ஒரு பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும், இன்னும் அதிக முயற்சிக்கொண்டு சிறந்த திறமைகளைக் கண்டறிவது அவர்களின் கடமை, நூறுகோடிக்கும் மேலுள்ள மக்கள்தொகையில் திறமைசாலிகளே இல்லையா என்பது கேள்வியெழுப்புகிறது. சில உட்கட்ட அரசியல் அங்கும் உலவுகிறது, இதை முறியடிக்க அனைத்து விளையாட்டுகளிலும் ஊடக வெளிச்சம் தேவைப்படுகிறது. ஊக்குவித்தால் மட்டுமே நாம் வருகிற 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் முழு வீச்சுடன் செயல்பட முடியும் எனபது உண்மை.

"ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான் "  என்ற வாலியின் வரிகள் கொண்டு வெளிச்சம் படராத விளையாட்டுகளை ஊக்குவிப்போம், வரும் தலைமுறையினருக்கு வழிவகுப்போம் !! இந்த கமான் வெல்த் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் 2020 யின் நம்பிக்கையில் மின்னுகிறார்கள்...

No comments:

Post a Comment