Translate

Tuesday, September 29, 2015

என் இதயச் சூட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் RX 100 பயணம்...

என் இதயச் சூட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் RX 100 பயணம்...

                    இந்த நிகழ்வும் உணர்வும் உங்களுக்கு வாய்திருக்குமானால் என்னை போல நீங்களும் ஓர் அதிர்ஷடசாலி, நான் பணி புரிந்த நிறுவனத்திலிருந்து இன்று விடைப் பெற்றேன், கடைசி நாள் என்று சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை, பிரிவின் தொடக்கம் என உரக்கச் சொன்னது ;கொஞ்சலான முத்தம் கொடுக்கும் பொய்யை விட பளீர் அரை விழும் உண்மை மெச்சத்தக்கது; இந்த ஒன்றரை மணி நேரம் RX 100 ல் ஒன்றரை ஆண்டு பணி புரிந்த நிகழ்வுகள், நினைவுகள் ,குறும்படங்கள் எடுத்த நாட்கள், சிரித்த , சண்டையிட்ட, அழுத உணர்வகள் ஒவ்வொரு க்ஷணமும் எதிரில் வரும் விளக்குகள் போல மின்னிக் கொண்டிருந்தது. சௌந்தரிடமும் தீனாவிடமும் மூவரும் சரவண பவனில் ஒரு காபி குடித்து படித்த பிடித்த கதையை , புத்தகத்தின் விமர்சனத்தை பேசிக்கொண்டே ஆறிப்போன காபியில் விழுத்த ஈயாய் ஆனேன் இன்று. நட்பின் சான்றை சமிக்ஞையில் சொல்லி கொடுத்த சௌந்தர், பிரேம், சர்வதா, திவ்யா, தினேஷ், வினோத் என நீளும் சிந்தனையில் டைடல் சிக்னலை கடக்க சற்றே சிவப்பு தெரிந்தது. நான் எடுத்த முடிவு சரியா என சிவப்பு அறிகுறி சொல்கிறதா என்று எண்ணுகையில் பச்சை விளக்கு பளீரிட்டது, என் RX 100 உறுமி என்னை அசைப்போடு என்று சொன்னது,சிலரிடம் பேசியதே இல்லை ஆனால் இன்று வந்து வெகு நாள் பழகினாற்போல் பேசின நண்பர்கள் என்ன சொல்வது ? மனது சொன்னது ' நீ அதிர்ஷ்டசாலி' புன்முறுவலுடன் நகர்ந்தேன் புழுதியில் நினைவுகளை தூசி தட்டி;
நான் எழுதும் கிறுக்கல்களை, குறும்படங்களை, அர்தமற்ற வானொலி பேச்சுகளை வெகுவாக பாராட்டி என்னை மிகவும் ஊக்குவித்த நண்பன் பிரகாஷ் , நான் எழுதியது அவனுக்கு முதலில் அனுப்புவேன், உடனே படித்து அவனின் நண்பர்களனைவருக்கும் பகிர்ந்துவிடுவான், அவனை பிரியும் போது குரல் தழுதழுக்கிறது, உண்மையான நண்பனின் பிரிவில் கண்கள் ஈரமானது அதிசியமில்லை, ஒரு மேலாளர் போலில்லாமல் நண்பனாய் பேசிப் பழகிய யாசர் இன்று மாலை 6 மணிவரை என் மனதை மாற்ற முயற்சி செய்து நான் வெற்றி பெற்றேன் ஆனால் அவரின் அன்பில் தோற்றுப்போனேன்.திவ்யா, தினேஷ் அன்பளிப்பாக கொடுத்த 'திருடன் மணியம்பிள்ளை' , மை பேனா வை யோசித்து சேத்பட் சிக்னலையும் கடந்தபோது அவர்கள் என் மனதை களவாடினார்கள் என இதயத்தில் ஒரு ஹோர்ன் அடித்தது, அப்படியே சிந்தனையோட்டத்துடன் செல்கையில் ஒரு ஆட்டோவில் " ஆகாசத்த நான் பாக்குறேன் .." என்ற பாடல் ஒலிக்க சர்வதா ஞாபகத்திற்கு வந்தாள், அவள் பாடிய பாரதியின் பாடல்கள்,வாதங்கள், எனக்காக இன்று எல்லைரையும் திரட்டியது, 20 நாட்களே பழகிய பென்னி 20 வருடம் பழகினார்போல தெளித்த அன்பு; சண்முகம், இலக்கிய படைப்பின் ஆளுமையை, உலக திரைப்படங்களை என பல்வேறு கருத்தக்களை தெளிவாக வேறு சிந்தியலில் சொல்லும் தம்பி, லெமன் டீயில் இருக்கும் புதினா வாசம் சொல்லும் எங்கள் நட்பின் சுவாசம், வெகு சில நாட்களே பேசிய ராதாவும் ஜெயந்தியும் 'ரூட்ட மாத்து' எனும் புத்தகம் கொடுத்த திகைக்க வைத்தனர்.என் கதைகளை வெகுவாக மெச்சிய சுந்தர் அண்ணா, யாமினி அவர்களின் பாராட்டுகளை பெற்ற நொடிகள், என நீங்கா நினைவுடன் சாம், வினோத், சரவணன்,கார்த்தி, ஜூட், மோகனா, நிதி, விஜயனின் நனைந்து கொண்டே சென்றேன் கெல்லிஸ் சிக்னலில் கண்கள் ஈரமாய் நீர் ஊற்றுப் போல் கசிய அருகிலிருந்த பஜாஜ் M 80 அண்ணா " ஏன்பா .. RX 100 னா ஸ்பீட் ஆஹ் தான் போவிய ?? கண்ணுல பார் தண்ணி .. தொடச்சிக்கோ " என்றார் ..
" ஆமா அண்ணா .. கொஞ்சம் ஸ்பீடு தான் " என்றேன்
அவர் காலத்தின் அசரீரி... கண்களை துடைத்து கனமான மனதுடன் வீடருகே வந்தேன். தொடர் வண்டி அருகே செல்லும் வீதியில் என் RX 100 ஐ நிறுத்தி, தொடர் வண்டி செல்ல... இவ்வளவு நினைவின் குவியல்கள் , அன்பு இதையங்கள், நெகிழியற்ற முகங்கள், பேச நினைத்து ஈடேறாத நபர்கள் , பேசிய நபர்கள் என பல படிமங்கள் தொடர் வண்டி வராத நிசப்தத்தில் கூச்சல் போட்டன .....
"பாதைகள் தொலைந்த பின்னும்
பயணங்கள் முடிக்க மறுக்கிறதே!
தேடிச் சென்றாலும்
சிறகுகள் உடைந்து போகிறதே !
எதுவுமில்லை நிரந்தரமென புரிகிறதே!
இதுவும் கடந்து போகிறதே !!"
நீங்களும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள் இத்தகைய நட்பின் கூடாரத்தில் ...

No comments:

Post a Comment